கருவுரானிலைத் தேவாரப் பதிகம்

திருச்சிற்றம்பலம்

திருக்கருவூரானிலை

பாடல் எண் : 1

தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயு மன்பரே.

பொழிப்புரை :

தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நஞ்சினை உண்ட வரும் , அரிய உயிர் போன்றவரும் , கற்கண்டு போல் இனிப்பவருமாய இறைவர் , கருவூர் ஆனிலையில் விளங்கும் தேவராவார் . அருள் வழங்கும் அன்புடையவர் அவர் .

குறிப்புரை :

தொண்டு எலாம் – தொண்டர் எல்லாரும் . உண்டல் – உண்ணல் , உண்டலாருமாம் . ஆருயிர் – அரியவுயிர் , உயிர்க்குயிர் . கண்டு அனார் – கண்டுபோலினிப்பவர் . திருக்கருவூரில் உள்ள திருக் கோயில் ஆநிலை , ஆன்நிலை எனப்படும் , பசுபதி என்னுந் திருப்பெய ருண்மை உணர்க . அண்டனார் – தேவர் . அன்பர் – அன்பையுடையர் .

பாடல் எண் : 2

நீதி யார்நினைந் தாய நான்மறை
ஓதி யாரொடுங் கூட லார்குழைக்
காதி னார்கரு வூரு ளானிலை
ஆதி யாரடி யார்த மன்பரே.

பொழிப்புரை :

நீதியின் வடிவானவர். நினைந்து ஆராயத்தக்கதாய நான்கு மறைகளை ஓதும் அந்தணர்களோடு கூடியவர். குழை அணிந்த திருச்செவியர். கருவூர் ஆனிலையில் விளங்கும் முதல்வர். அடியார்களுக்கு அன்பர்.

குறிப்புரை :

நீதியார் – நீதியே வடிவான சிவபெருமான். நினைந்து ஆய நான்மறை ஓதியார் – எண்ணி ஆராய்ந்த நான்கு மறைகளை ஓதுவார், கூடலார் – கூடுவார். குழைக்காதினார் – குழையணிந்த திருச்செவியை உடையவர். குழை தோட்டின் வேறானது; இதனைக் `குழையும் சுருள்தோடும்` என்ற திருவாசகத்தானறிக. ஆதியார் – முதல்வர். அடியார்தம் அன்பர் – அடியார்களுக்கு அன்பராயிருப்பர்.

பாடல் எண் : 3

விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே.

பொழிப்புரை :

வானத்தில் உலாவும் மதியைச் சூடியவர். வேத இசையாக விளங்குபவர். மேலான பண்பினர். கூத்தர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அடியவர்கட்கு நல்லவர்.

குறிப்புரை :

விண் – ஆகாயம். சூடி – வினையெச்சம். வேதமே பண் உளார் – வேதத்தில் சுரரூபமாக இருப்பவர். பரம் ஆய பண்பினர் – மேலாகிய பண்பை உடையவர். பண்பு – எண்குணம். கண்ணுள் – கூத்து. கண்ணுளார் – கூத்தர். கண் – உளார். உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவர். பண்பினர்கண் உளாருமாம். அண்ணலார் – தலைவர், பெரியர். அடியார்க்கு நல்லார் என்பது இறைவன் திருப்பெயர்களுள் ஒன்று.

பாடல் எண் : 4

முடியர் மும்மத யானை யீருரி
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியுளார் கரு வூரு ளானிலை
அடிகள் யாவையு மாய ஈசரே.

பொழிப்புரை :

சடைமுடியை உடையவர். மும்மதங்களை உடைய யானையை உரித்தவர். வெண்பொடி பூசியவர். மன்மதனைச் செற்றவர். சிறப்புடையவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அவர் எல்லாமாய் விளங்கும் ஈசராவார்.

குறிப்புரை :

முடியர் – சடைமுடிஉடையவர். வணங்குவோர் உச்சியருமாம் (பதி.162 `உச்சியார்`) மும்மதம் – கன்னம், கோசம், கை என்னும் மூன்றிடத்தும் ஒழுகும் மதநீர், `கன்னமும் கோசமும் கையும் என்னும், இன்னமுத்தானத்து இழிவன மும்மதம்`-(பொருட்டொகை நிகண்டு) ஈர்த்தல் – உரித்தல். ஈர் உரி – உரித்த தோல். உரியென்பது முதனிலைத் தொழிலாகு பெயர். பொடியர் – திருவெண்பொடியை உடையவர். உரியை அணிந்த பொடியர். வேளை – மன்மதனை, கருவேளை. செற்றவர் – அழித்தவர். கடி – சிறப்பு, அதிசயம். யாவையும் ஆய ஈசர் – `ஒருவனே எல்லாமாகி அல்லனாய் உடனுமாவான்`(சித்தி . 46)`முழுதுமாகிய மூர்த்தி`(பா .9).

பாடல் எண் : 5

பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யார்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே

பொழிப்புரை :

தாமரை போன்ற திருவடியர் . தம் திருமேனியின் பாதியாக உமையம்மையைக் கொண்டவர் . நீல மணி போன்ற கண்டத் தினர் . ஆகாய கங்கையைத் தாங்கியவர் . அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை உடையவர் , அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவராவார் .

குறிப்புரை :

பங்கயம் – ( சேற்றில் முளைப்பது ) தாமரை . மலர்ப் பாதர் – மலர் போன்ற திருவடியை உடையவர் . பாதி ஓர் மங்கையர் – அர்த்தநாரீச்சுரர் . மணி – அழகிய . வான் கங்கையர் – ஆகாச கங்கையை அணிந்தவர் . அம் – அழகு . ஆடு அரவத்து – ஆடுகின்ற பாம்பை உடைய .

பாடல் எண் : 6

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியின்
மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவ லர்கரு வூரு ளானிலை
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே.

பொழிப்புரை :

தேவர்கட்கு எல்லாம் தேவர். திங்கள், பாம்பு ஆகியவற்றை முடிமேல் சூடியவர். மும்மதில்களை எய்தவில்லை உடையவர். எல்லோரையும் காப்பவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் இவர் அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சக்தி வழங்கியவர் அல்லரோ?.

குறிப்புரை :

சென்னி – தலை. மேவர் – பொருந்துதலை உடையவர். வில்லியர் – மேருவாகிய வில்லை உடையவர். மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே – அயன் முதலிய மூவருமாகிய சக்தியை உடையவர் அல்லரோ. மொய்ம்பு – சக்தி.

பாடல் எண் : 7

பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
கண்ணி னார்கரு வூரு ளானிலை
நண்ணி னார்நமை யாளு நாதரே.

பொழிப்புரை :

பண்களின் வடிவாய் இருப்பவர். படிந்து ஏறுதற்கு உரிய விடையூர்தியர். நீறணிந்தவர். திருமேனியில் உமைஅம்மையைக் கொண்டுள்ளவர். பிறை சூடிய திருமுடியர். நெற்றியில் கண்ணுடையவர். கருவூர் ஆனிலையில் எழந்தருளியிருப்பவர். நம்மை ஆளும் நாதர் அவர்.

குறிப்புரை :

பண்ணினார் – பண்ணாயிருப்பவர். படி ஏற்றார் – படி (ந்து அமர்)தற்குரிய விடையை உடையவர். மெய்ப்பெண்ணினார் – பெண்ணை ஒருபாற் கொண்ட மெய்யார். மெய் – உடம்பு. நெற்றியர் – உச்சியர். கண்ணினார் – உலகுக்கொரு கண்ணாயிருப்பவர், ஞானக்கண்ணருமாம். நண்ணினார் – சேர்ந்தார். நமை – நம்மை. நாதர் – தலைவர், உடையவர்.

பாடல் எண் : 8

கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே.

பொழிப்புரை :

வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த இராவணனின் தலை தோள் ஆகியவற்றைத் தாளினால் அடர்த்தவன். பின் அவனுக்கு அருள் கொடுத்தவன். கூத்தன். அவன் கருவூர் ஆனிலையில் விளங்கும் பெரியவன்.

குறிப்புரை :

கடுத்த – கோபித்த. தலை தோளும் – தலைகளும் தோள்களும். தாள் – திருவடி. அருள்கொடுத்தவன் என்க.

பாடல் எண் : 9

உழுது மாநிலத் தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வூரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே.

பொழிப்புரை :

எல்லாமாய் விளங்கும் இறைவனின் பாதங்களைப் பன்றி வடிவெடுத்துப் பெரிய நிலத்தை உழுது சென்று முயன்ற திருமால், பிரமன் ஆகியோர் தொழுதும் காண்கிலர். அத்தகைய பெருமான் கருவூர் ஆனிலையில் நாம் எளிதின் வணங்க எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

ஏனம் – பன்றி. கழுதினான் – பேயன். முழுதும் ஆகிய மூர்த்தி – `யாவையும் ஆய ஈசர்` (பா .4).

பாடல் எண் : 10

புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூரு ளானிலை
அத்தர் பாத மடைந்து வாழ்மினே.

பொழிப்புரை :

புத்தர்களும் புன்மையான அறிவற்ற பொய்யுரைகளைக் கூறும் பித்தர்களாகிய சமணர்களும் பேசும் பேச்சுக்களை விட்டு உண்மையான பக்தர்கள் சேரும் கருவூர் ஆனிலையில் விளங்கும் மேலான இறைவனின் திருவடிகளை அடைந்து வாழுங்கள்.

குறிப்புரை :

ஆதர் – அறிவிலார். மெய்ப்பத்தர் – உண்மை அன்பர். அத்தர் – இறைவர், உயர்ந்தவர்.

பாடல் எண் : 11

கந்த மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வூரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தை யிற்றுய ராய தீர்வரே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் கருவூர் ஆனிலையை அடைந்து எம் தந்தையாகிய இறைவன் மேல் பாடிய இப்பதிகப்பாடல் பத்தையும் ஓத வல்லவர் மனத்துயர் தீர்வர்.

குறிப்புரை :

கந்தம் – வாசனை. துயர் ஆய – துன்பமானவை.

Leave a comment